Can't view the contents correctly? Click Here >>

 

இதயம் விற்ற காசுகள்

இம்மனித வாழ்க்கையின் மிகக்கொடுமையான காலம் சொந்த மண்னைவிட்டு, இரத்தப் பாசங்களைவிட்டு உலகின் எங்கோ மூலையில் பணத்துக்காக பணியாற்றுவதுதான். எந்த விசேஷத்துக்கும் கலந்துகொள்ள இயலாமல் பாலைவனத்தில் தனித்திருக்கும் மரத்தைப் போன்றதான வாழ்க்கையிது. எல்லோருமிருந்தும் யாருமற்றதான ஒரு வாழ்க்கையிது.

யாருக்கான வாழ்க்கை? எதை எதிர்பார்த்து இந்த வாழ்க்கை? பணம், பணம், பணம். உள்ளூரில் பெறும் சம்பளத்தைவிட வெளியூரில் சம்பளம் அதிகம். வெளியூரில் பெறும் சம்பளத்தைவிட வெளிநாட்டில் சம்பளம் அதிகம். இப்படி, சம்பளம் அதிகமாக கிடைக்கிறதென்பதற்காக எல்லோரையும் பிரிந்து நரகத்தில் பணியாற்ற வேண்டிய கட்டாயம். மனித வாழ்க்கையின் அடிப்படைத் தேடலே மகிழ்ச்சி/ஆனந்தம் தான் என்பார், சத்குரு அவர்கள். அந்த மகிழ்ச்சியை முழுதும் துறந்து வாழும் அயல் வாழ்க்கை அடிப்படைக்கே முரணான வாழ்க்கை தானே.

மனிதனை வெறுமை சூழ்ந்துகொள்வது எப்போது? அவனுக்கென்று யாருமில்லாத போது. ஆம், அந்த வகையில் சொந்தங்களை பிரிந்திருக்கும் வாழ்க்கை, ஒரு வெறுமையான வாழ்க்கைதான் என்றால் அது மிகையாகாது. செய்ற்கையான மகிழ்ச்சியில் ஆறுதலைத் நாடும் மனம் ஆரம்பத்தில் அதையே தொடர்ந்து தேடினாலும் காலவெள்ளத்தில் உண்மையை உணர்ந்துகொள்ளும்போது அற்புதமானதொரு வாழ்க்கையை இழந்திவிட்டது இறுதியில் தான் தெரிகிறது. காலம் கடந்த ஞானோதயத்தால் என்ன பயன்?

சொந்தங்களுடன் பேசி அளவளாவி, குதூகலமிட்டு விளையாடி சுகதுக்கங்களில் பங்கேற்று, ஊர் திருவிழாக்களில், பண்டிகைகளில் கலந்துகொண்டு அடையும் இன்பத்திற்கு ஈடு ஏது? தீபாவளி, பொங்கல், ஆடிக்கிருத்திகை, விநாயக சதுர்த்தி என்று எந்த விசேஷத்துக்கும் கலந்துகொள்ள இயலாமல் வாழும் இந்த அகதி வாழ்க்கை துன்பத்ட்திலும் துன்பம், கொடுமையிலும் கொடுமை.

நம்மூர் உணவு கிடையாது. நம்மூர் மக்கள் கிடையாது. நம் மொழி கிடையாது. உலகின் ஒப்பற்ற மொழியாம் தமிழ் மொழியில் பேசி மகிழ முடியவில்லை. இதைவிடவும் பெருங்கொடுமை இவ்வுலகில் இருக்க முடியுமா? இருட்டறை யில் சிறையிலிடப்பட்டிருப்பவனுக்கும் இவர்களுக்கும் என்ன வேறுபாடு?

என் கணித ஆசிரியர் இவ்வாறு அடிக்கடி கூறுவதுண்டு: “உள்ளூர் நட்டமும் வெளியூர் இலாபமும் ஒன்று” என்று. அந்நாட்களில் இதன் பொருள் புரியவில்லை. ஆனால், இன்று அதனை மிகச்சரியாகப் புரிந்துகொண்டுள்ளேன். ’திரைகடல் ஓடியும் திரவியம் தேடு’ என்பதெல்லாம் குறுகிய காலத்திற்கு மட்டும் தான். அதனால் தான், சொர்க்கமே என்றாலும் அது நம்மூருக்கு ஈடாகாது என்றனர்.

இறுதிக்காலத்தில் இருக்கும் தாத்தா, பாட்டி பாசத்துடன் வளர்த்த அப்பா, அம்மா, உடன்பிறப்புகள் என எல்லோரையும் பிரிந்து, வெறும் பணத்தை மட்டும் மாதாமாதம் அனுப்புவது என்பது இதயத்தை விற்று சம்பாதித்த காசுகள் தான்.
 

free hit counters
பதிப்புரிமை © TAMILCAFE. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை / IP கொள்கை 
 
Disclaimer: Most of the contents of this site are contributed by readers. TAMILCAFE.NET cannot be held responsible for authenticity of the contents or any copyright violation and views proposed by the author.
However, we are willing to take corrective actions.  This site also does not store any files on its server. We only index and link to content provided by other sites. Please send your queries to admin@tamilcafe.net