Can't view the contents correctly? Click Here >>

 

மாறிப்போன பெண்கள், மாறாத ஆண்கள்

பெண் விடுதலை, பெண் விடுதலை என்ற பெண்ணூரிமை மீட்டெடுப்பு போராட்டத்தின் விளைவாக தற்போது பெண்கள் மிகப்பரவலாக அனைத்து துறைகளிலும் காணப்படுகின்றனர். ஆணுக்கு பெண் எவ்விதத்திலும் சளைத்தவர்கள் இல்லை என்பதை நிருபிக்கும் வண்ணமாகவும் செயல்படுகின்றனர்.ஆனால், இப்படி செயல்படும் பெண்களில் பெரும்பான்மையானவர்களின் நடவடிக்கைகள் எப்படி இருக்கிறது?

ஆண்களைப்போல உடை உடுத்துவதும், நெஞ்சை நிமித்தி நடப்பதும் தான், பெண் சுதந்திரம் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர் போலும். மகாபாரத பாஞ்சாலியைப்போல எல்லா நேரத்திலும் கூந்தலை முடியாதே வருகின்றனர். கிராமத்துப் பெண்களைக் காட்டிலும் நகரத்து பெண்களிடம்தான் இந்தப்போக்கு மிதமிஞ்சி இருக்கிறது.எதனை வலியுறுத்த இவர்கள் இப்படி செயல்படுகின்றனர்?

தற்போது, குறிப்பாக படித்த கல்யாணமாகாத பெண்களிடம் அதிக மாற்றங்கள் காணப்படுகின்றன. இவர்கள் தங்களது கணவர் எப்படி இருக்க வேண்டும், திருமணத்திற்குப் பிறகு எப்படியெல்லாம் நடந்துகொள்ள வேண்டும், வீட்டு அலுவல்களை எப்படியெல்லாம் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று ஒரு நீண்ட பட்டியலையே முன்வைக்கின்றனர். இதனை பட்டியல் என்று கூறாது ஷரத்துக்கள் என்று கூறுவது தான் மிகச்சரியாக இருக்கும். திருமண வணிக ஒப்பந்த ஷரத்துக்கள் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டு அதன்படியே வாழ்க்கை நடத்துவதும் ஒரு வாழ்க்கையா? திருமண பந்தத்தையே கொச்சைப்படுத்தும் இத்தகைய ஷரத்துக்களை வெளிப்படையாகவும்,பொதுப்படையாகவும் பேசுவது தான் ‘பாரதி கண்ட புதுமைப்பெண்' என்று நினைத்துக்கொண்டிருக்கின்றனர்.

“இதயங்கள் வேண்டுமானால் இரண்டாக இருக்கலாம்;ஆனால் துடிப்பு ஒன்றாக இருப்பதை உறுதி செய்வதுதான் திருமணம்” என்பதை புரிந்தகொள்ளாமல், மேற்கத்திய பாணியில் கணவரை தேர்ந்தெடுத்து பின் விவாகரத்துக்கு முந்தியடிக்கின்றனர்.

தன் எண்ணோட்டத்திற்கு தகுந்தவராக இருக்க வேண்டும், தன் மனநிலையை புரிந்து நடப்பவராக இருக்க வேண்டும் என்ற அடிப்படை எதிர்பார்ப்புகள் இருப்பதில் எந்தத் தவறும் இல்லை.ஆனால், எதனையும் முன் ஒத்துக்கொள்ளப்பட்ட ஷரத்துக்களில் இருப்பதைப் போன்றுதான் நடந்துகொள்ள வேண்டும் என்பது அருவருக்கத்தக்கது. உதாரணமாக, தற்போது பெண்கள் அதிகம் வலியுறுத்துவது, “ நானும் சம்பாதிக்கிறேன், அதனால் வீட்டு வேலைகளை அவரும் பகிர்ந்துகொள்ள வேண்டும்” என்பதுதான். மேலோட்டமான பார்வையில் இதில் எந்தத் தவறும் இருப்பதாகத் தெரியாது, ஆனால், உற்றுநோக்கும் போதுதான் இதிலுள்ள கடுமை புரியும். யார் எந்த வேலையை செய்ய வேண்டும், எப்படி செய்ய வேண்டும் என்று முன்கூட்டியே தீர்மானித்து செயல்படுவதற்கு பெயர் திருமணமா?

தன் அன்பு மனைவி கஷ்டப்படுவதை எந்த கணவன்தான் பொறுத்துக்கொள்வான்? இதனை ஏன் இவர்கள் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள்? அப்படியே அவர் புரிந்துகொள்ளாவிட்டாலும், உங்கள் அதீத அன்பில் அவர் வழிக்குவந்து விடுவாரன்றோ! அதைவிடுத்து திருமணத்திற்கு முன்பே ஷரத்துக்களை முன்மொழிவது ஏனோ?

மாட்டின் பல்லைப்பிடித்துப்பார்ப்பதைப் போல பார்க்கின்றனர். பலர் மத்தியில் காட்சிப்பொருளைப் போல நிற்கவைத்து பார்க்கின்றனர் என்று கூப்பாடு போட்டார்களே, இவர்கள் எத்தகைய மணமகனை எதிர்பார்க்கிறார்கள் தெரியுமா? இதோ அந்த பட்டியல்.

  1. உயர்கல்வி நிறுவனங்களில் படித்திருக்க வேண்டும். முதுநிலை படித்திருந்தால் முன்னுரிமை.
  2. தன்னைவிட அதிகமாக சம்பாதிக்க வேண்டும்
  3. தங்கள் ஊரிலேயே/மாநிலத்திலேயே இருக்க வேண்டும்
  4. அழகான, நகைச்சுவைமிக்க மற்றும் கடவுள் பக்தியுடையவராக இருக்க வேண்டும்.
  5. பயனுள்ள பொழுதுபோக்கு கொண்டவராக, எந்த கெட்டப்பழக்கமும் இல்லாதவராக இருக்க வேண்டும்
  6. வீட்டு வேலைகளை பங்கீட்டுக்கொள்பராக இருக்க வேண்டும்
  7. இரண்டு அல்லது மூன்று வயது மட்டுமே வித்தியாசம் இருக்க வேண்டும்......

இப்படி அந்த பட்டியல் ஒரு முடிவிலியாக சென்றுகொண்டே இருக்கிறது. மேற்கூறிய பட்டியலை பார்க்கும்போது, இவர்கள் யாவரும் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியைதான் எதிர்பார்க்கின்றனர்.ஆனால், இவர்களுக்கெல்லாம் ஒன்றை ஞாபகப்படுத்துவது நம் கடமை. அந்த ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி கூட, தன் மனைவியை சந்தேகித்து, கர்ப்பிணி பெண்ணான அவளை தனியே காட்டிலிட்டு வந்தவன்.ஆனால் நாங்கள் அப்படியல்ல. இதயத்தில் வைத்து தாங்குபவர்கள்.உயிராகிவிட்டவளை உள்ளளவும் வைத்து போற்றுபவர்கள்.

பொதுவாகவே, “திருமணம் என்பது பெண்களுக்கு அன்பையும், பாதுகாப்பையும் அளிப்பது, அதேபோல ஆண்களுக்கு இன்னொரு தாயினை அடையாளம் காட்டுவது” என்று காலம்காலமாக சொல்லப்பட்டு வருகிறது. ஆனால், படித்த பெண்களில் பலர், தங்களுக்கு பணப்பாதுகாப்பு அளிப்பவருக்கே முன்னுரிமை கொடுக்கின்றனர். பணத்தை அடிப்படையாகக் கொண்டு வாழ்க்கைத்துணையை தேர்ந்தெடுப்பது கல்லைக்கட்டிக்கொண்டு கடலில் குதிப்பதற்கு சமம்.

பெருவாரியான பெண்கள் இப்படி மாறிவிட்டிருந்தாலும், ஆண்கள் இன்னமும் அதே இருபதாம் நூற்றாண்டு ஆண்களாகவே தொடருகின்றனர். குடும்பபாங்கான பெண்ணாக இருக்க வேண்டும், காலை எழுந்தவுடன் வாசலில் கோலமிட்டு தன்னை வரவேற்க வேண்டும், வருமானத்தை அறிந்து அதற்கேற்ப குடும்பத்தை நடத்திச் செல்பவளாக, நல்ல மருமகளாக, தன் தேவையறிந்து நடந்துகொள்பவளாக........ என்று இன்னமும் அதே பழைய பஞ்சாங்கமாகவே இருக்கின்றனர். ஆண்களே, அவர்கள் ஒளியின் வேகத்தில் பயணிக்கிறார்களாம். நாம், அவ்வளவு வேகமாக பயணிக்க வேண்டியதில்லை.ஆயினும், குறைந்தபட்சம் இருபத்தோராம் நூற்றாண்டுக்காவது வருவோமாக.

free hit counters
பதிப்புரிமை © TAMILCAFE. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை / IP கொள்கை 
 
Disclaimer: Most of the contents of this site are contributed by readers. TAMILCAFE.NET cannot be held responsible for authenticity of the contents or any copyright violation and views proposed by the author.
However, we are willing to take corrective actions.  This site also does not store any files on its server. We only index and link to content provided by other sites. Please send your queries to admin@tamilcafe.net