|

|
இது தான் மக்களாட்சியா?
மக்களால்
மக்களுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களால் ஆட்சி செய்யப்படுவது
மக்களாட்சி என பள்ளிப்பாடங்களில் படித்திருக்கலாம். அத்தகைய மக்களாட்சி தான்
இந்தியாவிலும் நடைபெறுவதாக இன்னமும் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.
உண்மையில் நடைபெறுவது என்ன? அதற்குமுன், மக்களாட்சி பற்றியதான தெளிவு
இருந்தால்தான், அதைப்பற்றியதான் விவாதத்தை தொடர முடியும். மக்களின் தேவைகளை
கோரிக்கைகளை உணர்ந்து செயல்படுவதும், அவர்களின் எதிர்பார்ப்புகளை
முற்றிலுமாக நிறைவேற்றுவதும், வெளிப்படையான தன்மையில் ஆட்சி செய்வதும்,
பொதுப்படையான நிலையில் பெரும்பான்மையான மக்களின் கருத்தையே அரசின்
கருத்தாக ஏற்று செயல்படுவதுமான அரசுதான் மக்களாட்சி அரசு. ஆனால் அத்தகைய
அரசு இதுவரையில் இந்தியாவில் அமையவில்லை.
5
ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லது தேர்தல் வரும்போதுதெல்லாம் வாக்களிப்பது
மட்டும் தான் மக்களின் வேலையாக அதுதான் மக்களாட்சி முறையாக இந்தியாவில்
இருக்கிறது. அரசை தேர்ந்தெடுக்கப்படும் வரைதான் மக்கள், மக்களாட்சி எல்லாம்,
தேர்ந்தெடுக்கப்பட்டபின் அது இங்கு சர்வாதிகார ஆட்சியாக மாறி விடுகிறது.
கூட்டணி அரசு என்கின்ற பெயரில், கூட்டு சர்வாதிகார ஆட்சிதான்
தேர்தலுக்குப்பின் நடைபெறுகிறது. வெற்றி பெற்று, ஆட்சியை பிடித்தபின்
இவர்கள் மக்கள் பக்கம் திரும்பி பார்ப்பதே கிடையாது. இனி, அடுத்த தேர்தல்
வரும்போது மட்டும் சில நாட்களுக்கு மக்களின் கால்களை பிடித்து, ஒட்டு
வாங்கிக் கொள்ளலாம் என்ற தெளிவான, உறுதியான எண்ணத்தில் சர்வாதிகார
ஆட்சியினை தொடருகின்றனர். எந்தவொரு கட்டத்திலும் இவர்கள் மக்களின் கருத்தை
கேட்பதே இல்லை. அதிலும் குறிப்பாக, தற்போது காங்கிரசு தலைமையில் ஆட்சி
நடத்தும் (ஐக்கிய முற்போக்கு கூட்டணி) மக்களை மாக்களாக நினைத்துக் கொண்டு
ஆட்சி செய்து வருகிறது. தொடர்ந்து மக்களின் கருத்துக்களை, தேவைகளை,
எண்ணங்களை, கோரிக்கைகளை, எதிர்பார்ப்புகளை முற்றிலுமாக புறக்கணித்து
வருகிறது.
குடியரசுத் தலைவர் தேர்தல் :
100
கோடி மக்களின் விருப்பமாக இருந்த அன்றைய குடியரசுத் தலைவர் அப்துல் கலாமையே
மீண்டும் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதனை
முற்றிலுமாக ஒதுக்கித்தள்ளிவிட்டு, பெரும் சர்ச்சைக்குரிய பிரதிபா பாட்டிலை
குடியரசுத் தலைவர் நாற்காலியில் அமர்த்தி, அந்த 100 கோடி மக்களின்
முகத்தில் கரியை புசிவிட்டது. சோனியா காந்தியை பொறுத்தவரையில், மக்களின்
கருத்து விருப்பம் என்பதெல்லாம் கால் தூசுக்கு சமமாகி விட்டது போலும்
இன்று
பிரதிபா பாட்டில் தன் பரம்பரையுடன் ஜனாதிபதி மாளிகைக்கு
குடிபெயர்ந்துவிட்டார். அதுமட்டுமல்லாது, அரசு வெளிநாட்டுப் பயணங்களின்
போது, தன் மகனையும் உடன் அழைத்துச் செல்வதோடு, சொந்த வியாபார
நிகழ்வுகளையும் அந்த அரசுப் பயணத்திலேயே முடித்துக்கொள்கிறார். மேலும்,
சமீபத்தில் காஷ்மீர் சென்றிருந்த இவர், அங்குள்ள மக்கள் துயர்கண்டு
வருத்தப்படுவதை விடுத்து, துப்பாக்கியை ஏந்தி நிற்பதைப் போல
புகைப்படத்திற்கு “போஸ்“ கொடுக்கிறார். இந்தியாவின் முதல் குடிமகன் என்று
அழைக்கப்படுபவர் செய்யும் செயல்களா இவை? இத்தகைய ஒருவரை தேர்ந்தெடுத்தது
யார்? சோனியா காந்தி தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி தானே. மக்களின்
கருத்தை , விருப்பத்தை பொருட்படுத்தாமல், பிரதிபா பாட்டிலை தேர்ந்தெடுத்தது
ஜனநாயகமா? அணு விஞ்ஞானி அப்துல் கலாமை ஆதரிக்காதது எந்த வகையில் நியாயம்?
இட ஒதுக்கீடு :
இட
ஒதுக்கீடு என்றும் விஷச்செடியை இந்தியாவில் வேரூன்றச் செய்த காங்கிரசு அரசு,
தற்போது அதற்கு மேலும் வலுவூட்டுவதாக, செறிவூட்டுவதாக உயர்கல்வி
நிறுவனங்களில் 27% இடஒதுக்கீடு என்பதனை சட்டமாக்கியுள்ளது. மக்கள் மத்தியில்
நிரந்தர பிரிவினையை ஏற்படுத்தவிருக்கும் இந்த வஞ்சக செயலுக்கு, நாடு
ழுமுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பிய போதிலும் அதனை சற்றுகூட மதியாது.
ஒட்டுவங்கியை மட்டுமே குறிவைத்து சட்டமியற்றியுள்ளது. மேல்தட்டு மக்களுக்கு
மட்டுமே பயன்படக்கூடிய இந்த அபாய இடஒதுக்கீட்டினை பல மருத்துவ மாணவ /
மாணவிகளும், பொறியியற் வல்லுனர்களும், நிபுணர்களும், அறிஞர்களும் ஒரு சேர
எதிர்த்ததை தம்முடைய பாசிச நடவடிக்கைகளினால் ஒடுக்கிவிட்டது இந்த காங்கிரசு
அரசு. மக்களின் குரல்வளை இங்கே ஆரம்பத்திலேயே நசுக்கப்பட்டு விடுகிறது.
பெரும்பான்மை மக்களின் எதிர்ப்பையும் மீறி சட்டமியற்றுகின்றனரே, இதுதான்
மக்களாட்சியா? இதற்குப் பெயர்தான் ஜனநாயகமா?
இலங்கைத் தமிழர்களின் பிரச்சனை :
தமிழர்களின்
தொப்புள்கொடி உறவான இலங்கைத் தமிழர்களின் பிரச்சனைக்கு காங்கிரஸ்
என்றில்லாது அனைத்து மத்திய, மாநில அரசுள் இதுவரையிலும் தீர்வுகாண
முற்படவில்லை. நாளும் நூற்றுக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டு வரும் துயர
நிலையை துடைத்தெடுக்க எந்த அரசியல் தலைவர்களும் (வைகோ, பழ நெடுமாறன்
நீங்களாக) நடவடிக்கை எடுக்க முன்வரவில்லை. இலங்கைத் தழிழர்களை மாற்றாந்தாய்
மனப்பான்மையுடன் காண்பவர்கள் தாம் இதுவரையில் தமிழகத்தில் ஆட்சிபீடத்தில்
அமர்ந்துள்ளனர். உலக நாடுகள் பலவும், அடிமைத்தளையினை உடைத்தொறிந்துவிட்டு,
சுதந்திரக் காற்றினை சுவாசித்து வரும் வேளையில், நம் இலங்கைச் சகோதரர்கள்
மட்டும், அடிமைத்தனத்திலேயே இருப்பதா என்ற கேள்வி, அனைத்து தமிழ்
நெஞ்சங்களிலும் எழும்பியுள்ளது. இலங்கைத் தமிழர்களின் தனிநாடு கோரிக்கையான
தமிழீழத்தை ஏற்படுத்திக் கொடுப்பதில் என்ன பிரச்சனை இருக்கிறது?.
இலங்கையில் அமைதி ஏற்பட
வேண்டுமானால்,
அது இந்தியாவின் மத்திய அரசம் (ம) தமிழக அரசின் தலையீட்டு இல்லாமல் முடியவே
முடியாது என்கிற நிதரசன உண்மை அறிந்திருந்த போதிலும், பன்னெடுங்காலமாக,
இவ்விஷயத்தில் மௌனம் காப்பது ஏன்? 2002-லிருந்து இதுவரையில், சுமார்
2,15,000 பேர் இலங்கையில் கொல்லப்பட்டிருப்பதாக செய்திகள் வெளிவருகின்றன.
அஹிம்சா வழி, அறவழி என்று மார்தட்டும் இவர்கள், இலங்கையில் நாளும் நிகழும்
உயிர்பலியையும் அறவழி என்றே அழைப்பனரா? “இலங்கைப் பிரச்சனைக்கு விரைவில்
தீர்வு காணப்பட்டு அங்கே அமைதியை ஏற்படுத்த வேண்டும். தனிஈழ நாட்டை உலக
நாடுகள் அங்கீகரிக்க வேண்டும்” என்ற பெரும்பான்மை மக்களின் எண்ணத்தை,
கோரிக்கையை இந்திய அரசம், தமிழக அரசம் தொடர்ந்து புறக்கணிப்பது ஏன்?
நாட்டு மக்களின் கோரிக்கையை எந்த வகையிலும் நிறைவேற்றி விடக்கூடாது
என்பதுதான் இவர்கள் விருப்பம். எதேச்சதிகார போர்வைக்கு இங்கே மக்களாட்சி
என்று பெயர். இனப்படுகொலைகளுக்கு இங்கே காந்திய வழி என்று பெயர்.
சேது கால்வாய் :
பெரிய
கனரக கப்பல்கள் இந்திய துறைமுகங்களுக்கு வந்து செல்ல ஏதுவாக இருப்பதற்கு
கடலை ஆழப்படுத்தி கால்வாய் ஒன்றை கட்டிட வேண்டுமென்று, அன்றைய சேது மன்னர்
நினைத்தாராம். தொடர்ந்து தள்ளிப்போடப்பட்டு வந்த இந்த திட்டம், ஐக்கிய
முற்போக்கு கூட்டணி நிறைவேற்றுவது என அதற்கான பணிகளை முடக்கிவிட்டது. ஆனால்,
இதில் பல்வேறு சர்ச்சைகளும், சிக்கல்களும் நாளும் உருவாகிவருகின்றன.
•
ராமரால்
கட்டப்பட்ட பாலம் இன்னும் கடலுக்கடியில் அப்படியே இருப்பதினால், அதனை
சேதப்படுத்தக்கூடாது. அதனை சேதப்படுத்துவது, இந்துக்களின் மனதை
புண்படுத்திவிடும்.
• மீன் வளம் வெகுவாக குறைந்து போவதோடு, கடற் பாசிகள், கடற் தாவரங்கள்
அனைத்தும் அழிந்துபோக அதிக வாய்ப்புள்ளன.
• பெரிய கப்பல்கள் வந்து செல்லது என்பது சாத்தியமில்லாத ஒன்று. நிச்சயமாக
தோல்வியைத் தழுவும் இந்த திட்டத்திற்கு கோடிக்கணக்கான ரூபாய் செலவழித்து
பாடம் கற்றுக்கொள்வது முட்டாள்தனம்.
• கடலை, என்னதான் ஆழப்படுத்தினாலும், அலைகளால் மீண்டும் மீண்டும் மண்
முடப்படுமாதாலால், தரைவழிப் போக்வரத்தை ஊகுக்குவிப்பதே சாலச்சிறந்தது.
• அனைத்து இருப்புப்பாதைகளையும் இருவழிப்பாதைகளாக மாற்றினாலே இந்தியாவின்
அனைத்து சரக்கு போக்குவரத்தை மிக எளிதாக கையாண்டுவிடலாம்.
இப்படி பலவிதமான எதிர்ப்புக்குரல்கள் ஓங்கி ஒலித்துவரும் வேளையில், ஐக்கிய
முற்போக்கு கூட்டணி வேண்டுமென்றே சேது காலவாய் திட்டத்தில் தீவிரம்
காட்டுவது ஏன்? உண்மையில் இத்திட்டம் நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும்
எந்த வகையில் பயன்படுப்போகிறது என்பதனைப் பற்றியதான வெள்ளையறிக்கையினை
வெளியிடுவதோடு பொது விவாதத்தினையும் நடத்தலாமே. இந்திய மக்கள் என்ன
நினைக்கிறார்களோ அதனை செயல்படுத்துவதும், பிரதிபலிப்பதும் தானே மக்களாட்சி?
அதனை விடுத்து, வறட்டு கவுரவத்திற்காக திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம்
என்று கூக்குரலிடுவது, சர்வாதிகாரத் தன்மையல்லாமல் வேறென்ன?
எந்தவொரு முக்கிய பிரச்சனை குறித்தும் மக்களிடம் கருத்து கேட்பதே கிடையாது.
• பொது விவாதம்.
• ஒட்டெடுப்பு
• நாளிதழ், இணையதளங்களில் வெள்ளையறிக்கைகள் வெளியீடு.
• கேள்வி பதில் வடிவிலான திட்டம் பற்றியதான விளக்கவுரை.
என்று எதுவுமே கிடையாது……
நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்க வேண்டியது கிழட்டு அரசியல்வாதிகள் அல்ல,
இளைஞர்களே. இந்திய அரசியலில் பெரும் மாற்றம் ஏற்பட்டால்தான், உண்மையான
மக்களாட்சி நடைபெறும். ஆதலால் இளைஞர்களே அரசியலுக்கு வாரீர். வாரீர்.
|
|